தினமலர் 21.09.2010
சேலம் மாநகராட்சியில் தினமும் வரி வசூல் பணி குறித்து ஆய்வு
சேலம்: சேலம் மாநகராட்சியில் வரி வசூல் பணி குறித்து தினமும் உதவி வருவாய் ஆய்வாளர்களிடம் நேரடி ஆய்வு செய்யப்படுகிறது.சேலம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்டவற்றை வசூல் செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் ஆட்டோக்கள் மூலம் நிலுவை தொகையை செலுத்துமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர். நான்கு மண்டல அலுவலகங்களிலும் தினமும் லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருகிறது. வரி வசூல் பணியில் தொய்வு ஏற்படாமல் இருக்க தினமும் அப்பணி குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் நான்கு மண்டலத்திலும் பணியாற்றும் உதவி வருவாய் ஆய்வாளர்களிடம் தினமும் வசூல் செய்யப்படும் நிலுவை தொகை குறித்த விவரங்களை மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி ஆய்வு செய்கிறார். வரி வசூல் குறையும் வார்டுகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு உதவி வருவாய் ஆயவாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.தினமும் வரி வசூல் குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்வதால், உதவி வருவாய் ஆய்வாளர்கள் ஒவ்வொரு வார்டிலும் நிலுவை வரிகளை வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதே நிலை நீடிக்கும்பட்சத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதல் தொகை வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.