தினமலர் 28.09.2010
மாநகராட்சிக்கு சினிமா தியேட்டர் ரூ.4 லட்சம் வரி செலுத்த உத்தரவு
மதுரை: மதுரை அரசரடி வெள்ளகண்ணு தியேட்டர் உரிமையாளர் தியாகராஜன், மாநகராட்சிக்கு வரி நான்கு லட்சம் ரூபாயை நான்கு மாதங்களுக்குள் செலுத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. வெள்ளகண்ணு தியேட்டர் நிர்வாகத்திற்கு, 3.02 லட்சம் ரூபாய் வரி செலுத்துவது குறித்து கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் நோட்டீஸ் அனுப்பினர். அதை ரத்து செய்ய கோரி தியேட்டர் உரிமையாளர் தியாகராஜன் ரிட் மனு செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, பாதி தொகையை செலுத்த உத்தரவிட்டது. அதை தியேட்டர் நிர்வாகம் செலுத்தவில்லை. இந்நிலையில் மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி சார்பில் வக்கீல் ரவிசங்கர் ஆஜரானார். நீதிபதி, தியேட்டர் உரிமையாளர் நான்கு லட்சம் ரூபாயை நான்கு வாரங்களுக்குள் மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும். தவறினால் மாநகராட்சி அதை வசூலிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்,என உத்தரவிட்டார்.