தினமணி 06.10.2010
குடிநீர்க் கட்டணங்களைச் செலுத்த மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
திருச்சி, அக். 5: திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர்க் கட்டண கேட்பு தொகைகளை அக். 15-ம் தேதிக்குள் செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட குடியிருப்புக் கட்டடங்கள், வணிக உபயோகக் கட்டடங்கள் மற்றும் தொழில்சாலைக் கட்டடங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு, தனித்தனி விகிதங்களில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.
வீட்டு உபயோக இணைப்புக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், வீட்டு உபயோகமல்லாத இணைப்புகளுக்கு மாதந்தோறும் கேட்பு எழுப்பப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. நிலுவை மற்றும் நடப்பு கேட்பு குறித்த விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இணையதளம் மூலமாகவோ அல்லது கணினி வரி வசூல் மையங்களிலோ இந்த நிலுவை மற்றும் நடப்பு கேட்பு விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். குடிநீர்க் கட்டணத்தை மாநகராட்சி மைய அலுவலகம், கோட்ட அலுவலகங்கள், சேவை மையங்கள் மற்றும் நடமாடும் கணினி வரி வசூல் மையம் ஆகிய இடங்களில் நிலுவையின்றிச் செலுத்தலாம்.
தவறும்பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள பொறியர் பிரிவு மற்றும் வருவாய்ப் பிரிவு அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர் மூலம் சட்டப்படி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.