தினகரன் 13.10.2010
சித்தூர் மாவட்டத்தில் நகராட்சி வரி பாக்கிகளை உடனே வசூல் செய்யுங்கள் ராயலசீமா வட்டார இயக்குனர் உத்தரவு
சித்தூர், அக்.13: சித்தூர் மாவட்டத்தில் நகராட்சி வரி பாக்கிகளை உடனே வசூல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ராயலசீமா நகராட்சி வட்டார இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
சித்தூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று ராயலசீமா நகராட்சி வட்டார இயக்குனர் முரளி கிருஷ்ணாகவுட் தலைமையில் மாவட்டத்திலுள்ள அனைத்து நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் முரளிகிருஷ்ணாகவுட் பேசியதாவது:
சித்தூர் மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளில் அதிகாரிகள் இம்மாதம் 30ம் தேதிக்குள் சொத்து வரி, குடிநீர்வரி போன்றவற்றை வசூல் செய்யவேண்டும். மேலும் நகராட்சி வளர்ச்சி பணிகள் தாமதமாகாமல் விரைவு படுத்த வேண்டும்.
வரி செலுத்தாதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். அரசு நலத்திட்ட பணிகள் அனைத்தும் உடனடியாக செயல்படுத்தவேண்டும். சிமென்ட் சாலைகள் அமைத்தல், ஆழ்துளை கிணறுகள் தோண்டுதல், கால்வாய் அமைத்தல், தெருவிளக்குகள் போன்ற பணிகளுக்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். பொதுமக்களின் பிரச்னைகளை உடனடியாக தீர்த்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் சித்தூர் நகராட்சி ஆணையாளர் எஸ்.எஸ்.வர்மா உட்பட மாவட்டத்தில் உள்ள திருப்பதி, நகரி, புத்தூர், பலமனேர், மதனப்பள்ளி, காளஹஸ்தி, புங்கனூர் உள்ளிட்ட நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.