தினமணி 18.10.2010
வரி பாக்கி: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
திருநெல்வேலி,அக்.17:திருநெல்வேலி மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என அம் மாநகராட்சியின் ஆணையர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி,காலிமனை வரி, தண்ணீர் கட்டணம்,தொழில் வரி,பாதாள சாக்கடை, சேவைக் கட்டணம்,கடை வாடகைகள் ஆகியவற்றை பொதுமக்கள் திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகம், தச்சநல்லூர்,பாளையங்கோட்டை,திருநெல்வேலி,மேலப்பாளையம் ஆகிய மண்டல அலுவலங்களில் உள்ள சேவை மையங்கள், அலகு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் செலுத்தி வருகின்றனர்.
தீவிர வரிவசூல் முகாம் மூலமும் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. வரி செலுத்துமாறு மக்களிடம் பல்வேறு அறிவிப்புகளும்,விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. நடமாடும் வரி வசூல் வாகனம் மூலம் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கே சென்று வரி வசூலிக்கப்படுகிறது.
இருப்பினும் சிலர் வரியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். இதன் காரணமாக பணிகளில் இடர்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் தொடர்ந்து நிலுவை வைத்துள்ளவர்களின் பெயர்,முகவரி பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. இந்தப் பட்டியல் மாநகராட்சி மைய அலுவலகம், மண்டல அலுவலகங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வைக்கப்படும். இதேபோல இணையத்தளத்திலும் இப் பட்டியல் வெளியிடப்படும்.
இந் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் இருப்பதற்கு, வரி செலுத்தாமல் இருப்பவர்கள் இனியும் காலதாமதம் செய்யாமல் நிலுவை வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்றார் சுப்பையன்.