தினகரன் 26.10.2010
ஆரணி நகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரி பாக்கி கட்டாவிட்டால் ஜப்தி ஆணையாளர் எச்சரிக்கை
ஆரணி, அக்.26: ஆரணி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, குடிநீர் வரி மற்றும் வாடகை பாக்கிகளை உடனடியாக செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ஆரணி நகராட்சி ஆணையாளர் சசிகலா நேற்று அளித்த பேட்டி:
ஆரணி நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தவேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, நகராட்சி கடை வியாபாரிகள் வாடகை நிலுவை, குத்தகை இனங்கள் உள்ளிட்ட வரி பாக்கிகளை உடனடியாக செலுத்தி நகர வளர்ச்சித் திட்டப்பணி களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
வரி, வாடகை பாக்கி செலுத்தாதவர்களின் சொத்துகள் ஜப்தி செய்யப்படும். கடைகளுக்கு சீல் வைக்கப்படும். குடிநீர் இணைப்பை துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலையை சுற்றி நகராட்சி அலுவலர்கள், ஊழியர்களின் சொந்த செலவில் நவீன பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இதற்கு விருப்பம் உள்ளவர்கள் உதவி செய்யலாம். மேலும் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ளே வெங்கட்ராமன் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
நகராட்சியை சேர்ந்த சுந்தரம் தெரு, வடியராஜா தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக புகார்கள் வந்துள்ளன. அதை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.