தினகரன் 11.11.2010
மாநகராட்சிக்கு சொத்து வரியாக ரூ37 லட்சம் செலுத்தியது மெட்ரோ நிறுவனம்
புதுடெல்லி, நவ. 11: மெட்ரோ ரயில் நிறுவனம், சொத்து வரியாக முதல்கட்டமாக ரூ37 லட்சத்தை மாநகராட்சிக்கு செலுத்தியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சொத்து வரி உயர் அதிகாரக் குழு தலைவர் வேத் பிரகாஷ் குப்தா கூறியதாவது:
சொத்து வரியை வசூலிப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் முனைப்பு காட்டவில்லை என்று கவுன்சிலர் களும், பல்வேறு கட்சி தலைவர்களும் புகார் கூறி வந்தனர். இந்நிலையில், சொத்து வரியை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டது.
மெட்ரோ ரயில் நிறுவனம் சொத்து வரியாக ரூ10 கோடி செலுத்த வேண்டியிருந்தது. இதுதொடர்பாக அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் முதல்கட்டமாக ரூ37 லட்சத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் செலுத்தி உள்ளது. மீதமுள்ள தொகையையும் விரைவில் செலுத்திவிடும்படி அதனிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனத்துடன், மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து தொட ர்பு கொண்டுள்ளனர்.
இதேபோல், தனியார் மின்விநியோக நிறுவனங்களிடம் சொத்து வரியை முடிவு செய்வது தொடர்பாக, அந்நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டம் மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் நடத்தப்பட்டது.
மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரியை செலுத்தாமல் உள்ளவர்களை பற்றிய விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சொத்து வரி நிலுவை தொடர்பான சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம் வரும் ஜனவரி 31ம் தேதி வரையில் அமலில் இருக்கும்.
சொத்து வரி தொடர்பான விண்ணப்பம் பல பக்கங்களாக இருந்ததை மாற்றி, மிக எளிமையாக ஒரே பக்கமாக ஆக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் எளிமையாக்குவதற்கான நடவடிக்கைகளும் நடந்து வருகிறது. அடுத்த நிதியாண்டில் இருந்து இந்த விண்ணப்பங்கள் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு வேத் பிரகாஷ் குப்தா கூறினார்.