Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரிகளை நிலுவை இன்றி வசூலிக்க வேண்டும்

Print PDF

தினமணி            21.11.2010

வரிகளை நிலுவை இன்றி வசூலிக்க வேண்டும்

சேலம், நவ. 20: சேலம் மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து, குடிநீர் வரி தொகையை நிலுவை இல்லாமல் வசூலிக்க வேண்டும் என்று வருவாய் பிரிவு ஊழியர்களுக்கு ஆணையர் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வரி வசூல் பணி தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட வருவாய் பிரிவு அதிகாரிகள், பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைகள், கடை வாடகைகள் பல மாதங்கள் நிலுவையில் இருப்பது குறித்து ஆணையரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து கூட்டத்தில் பேசிய ஆணையர், மாநகராட்சியின் 60 கோட்டங்களிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள, சீரமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் விடுபடாமல் முழுமையாகக் கண்டறிந்து வரி விதிப்பு செய்ய வேண்டும். மேலும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரிக்கான கேட்பு அட்டையை வரும் 1-ம் தேதி முதல் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

பொதுமக்களால் செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை, ஆண்டு உரிமை ஆணை இனங்கள், இதர இனங்களின் தொகைகளை நிலுவையின்றி முனைப்புடன் வசூலிக்க வேண்டும். பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து தங்கள் நிலுவைகளை செலுத்த வேண்டும் என்றும் தங்களது சொத்து வரி விவரத்தை ரூ. 10 செலுத்தி கேட்பு அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையடுத்து மாநகர எல்லைக்குள் புதிதாக கட்டப்பட்டுள்ள, சீரமைக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்கு வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் வரி விதிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் இது குறித்து கட்டட உரிமையாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.