தினகரன் 01.12.2010
வரி கட்டாவிட்டால் குடிநீர் இணைப்பு ‘கட்’ காசிபாளையம் நகராட்சி எச்சரிக்கை
ஈரோடு, டிச.1: சொத்துவரி, தொழில்வரி கட்டத் தவறினால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று காசிபாளையம் நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சொத்துக்களுக்கான வரிகள் ஆண்டுதோறும் வசூலிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை தவணைகளாக வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி இம்மாதம் வரி செலுத்த கடைசி ஆகும்.
இதனையடுத்து, காசிபாளையம் மூன்றாம் நிலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணம் ஆகியவற்றை இம்மாதம் 15ம் தேதிக்குள் காசிபாளையம் நகராட்சி வசூல் மையங்களில் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் மையம் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வரிகள் செலுத்தாமல் இருந்தால் எவ்வித முன்னறிப்பும் இன்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு சட்டப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று காசிபாளையம் நகராட்சி செயல் அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.