Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அறிவிப்பு : அங்கீகரிக்கப்படாத குடியிருப்பு பகுதிகளுக்கு சொத்துவரி விலக்கு

Print PDF

தினகரன் 03.12.2010

மாநகராட்சி அறிவிப்பு : அங்கீகரிக்கப்படாத குடியிருப்பு பகுதிகளுக்கு சொத்துவரி விலக்கு

புதுடெல்லி, டிச. 3:

அங்கீகரிக்கப்படாத குடியிருப்புக்கள், புறநகர் கிராமங்களில் வசிப்பவர்கள் இனிமேல் சொத்துவரி செலுத்த தேவையில்லை. அவர்களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா அறிவித்துள்ளார்.

டெல்லி மாநகராட்சியில் 1,639 குடியிருப்புகள் அங்கீகரிக்கப்படாமல் இருக்கின்றன. இந்த குடியிருப்புக்களுக்கு முறையாக அங்கீகாரம் வழங்கும் வரை சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் 2 நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் நகர்ப்புற மற்றும் புறநகர் கிராமங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிகப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநகராட்சி நிலைக்குழு கூட்டம், அதன் தலைவர் யோகேந்தர் சந்தோலியா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புக்களுக்கும், நகர்ப்புற மற்றும் புறநகர் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் யோகேந்தர் சந்தோலியா கூறியதாவது:

மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 1,639 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புக்களுக்கும், புறநகர் பகுதியில் இருக்கும் கிராமங்களுக்கும் சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும். அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள்ளில் வசிப்பவர்கள் மற்றும் நகர்ப்புற மற்றும் புறநகர் கிராமங்களில் வசிப்பவர்களிடம் இருந்தும் இனிமேல் சொத்து வரி வசூலிக்கத் தேவையில்லை.

டெல்லியில் இருக்கும் 35 லட்சம் சொத்துக்களில் 9 லட்சம் சொத்துக்களின் உரிமையாளர்கள் மட்டுமே இப்போது சொத்து வரி செலுத்துகின்றனர். எனவே நகரில் இருக்கும் சொத்துக்களுக்கான வரி வசூலிப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகரிக்கப்படாத குடியிருப்புக்கள், நகர்ப்புற மற்றும் புறநகர் கிராமங்களில் உள்ள சொத்துக்களுக்கு வரி செலுத்தும்படி அதன் சொந்தக்காரர்களுக்கு வரி கேட்பு மனு எதுவும் அனுப்ப வேண்டாம் என்று மாநகராட்சி ஆணையாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு யோகேந்தர் சந்தோலியா கூறினார்.