தினமணி 03.12.2010
நிலுவையில் உள்ள வரிகளை செலுத்த ஆணையர் வலியுறுத்தல்
மதுரை, டிச. 2: மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் பல்வேறு வரி இனங்களை உரிய காலத்துக்குள் செலுத்த சம்பந்தப்பட்டோர் முன்வரவேண்டும் என, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் தெரிவித்துள்ளதாவது:
மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு கட்டடங்கள் மூலம் வரவேண்டிய வருவாய் பல கோடி ரூபாய் வரை நிலுவையில் உள்ளது. நிலுவையாக உள்ள சொத்துவரி, குடிநீர் வரி, பாதாளச் சாக்கடை வரிகளை உடனடியாக உரிய காலத்துக்குள் சம்பந்தப்பட்டோர் செலுத்த வேண்டும்.
இது தொடர்பாக வரித் தண்டலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் தங்களுடைய வரிகளை உரிய காலத்துக்குள் செலுத்தி, மாநகராட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும், ஜப்தி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்புத் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படியும்,பொதுமக்கள், கடை உரிமையாளர்களை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.