தினமலர் 07.12.2010
பாதாள சாக்கடை கட்டணம் குறைக்க பரிசீலனை : மாநகராட்சி கமிஷனர் தகவல்
மதுரை : ""மதுரையில் பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணத்தை குறைப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும்,"" என மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் கூறினார்.
மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சாலைகளை செப்பனிட டெண்டர் விடப்பட்டுள்ளது. மழை நின்றதும், பணிகள் துவங்கும். பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணமாக முன்பு வீடுகளுக்கு மாதத்திற்கு 30 ரூபாய், தொழிற்சாலைக்கு 150 ரூபாய், வணிக நிறுவனங்களுக்கு 90 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது வீடுகளுக்கு மாதம் 125 ரூபாய், தொழிற்சாலைக்கு 375 ரூபாய், வணிக நிறுவனத்திற்கு 250 ரூபாய் என மாற்றப்பட்டுள்ளது.
31.11.2003ல் வெளியிடப்பட்ட அரசாணையின் படி, பாதாள சாக்கடை பணிகள் முடிந்ததும், கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு பாதாள சாக்கடை பராமரிப்பு செலவு மட்டும் 36 கோடி ரூபாய் ஆகிறது. தற்போது நகரில் 94 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. மேலும் 60 ஆயிரம் இணைப்புகள் வர இருக்கின்றன. 30 பம்பிங் ஸ்டேஷன்கள் இருக்கின்றன. இச்செலவால் நிதி நிலைமை பாதிக்கப்படும். ஒரு நாளைக்கு 107 லட்சம் மில்லியன் லிட்டர் சாக்கடை நீர், பாதாள சாக்கடை மூலம் வெளியேற்றப்படுகிறது. எனினும் பாதாள சாக்கடை கட்டண உயர்வை குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.