Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிலுவை வரியை வசூலிக்க தீவிர நடவடிக்கை: மாநகராட்சி கமிஷனர்

Print PDF

தினமணி              09.12.2010

நிலுவை வரியை வசூலிக்க தீவிர நடவடிக்கை: மாநகராட்சி கமிஷனர்

மதுரை, டிச.8: மதுரை மாநகராட்சிக்கு பல்வேறு இனங்களிலிருந்து ரூ.80 கோடி வரை வரிகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலுவை வரிகளை வசூலிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது:

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 1,60,171 வரி விதிப்புகள் உள்ளன. இவற்றின் மூலம், இந்தாண்டு ரூ.50 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கில் இதுவரை ரூ.24 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர குடிநீர்க் கட்டணம், பாதாளச் சாக்கடைக் கட்டணம், தொழில் வரி, காலிமனை வரி, மாநகராட்சி கடைகளுக்கான வாடகை பாக்கிக் கட்டணம் உள்பட ரூ.80 கோடி வரை வரிகள் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதில், அரசுக் கட்டடங்கள் மூலம் மட்டும் ரூ.8 கோடி வரை வரி செலுத்தப்படாமல் உள்ளன.

நகரில் வசதி படைத்தவர்கள், மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள்கூட அதிகளவில் வரிப் பாக்கி வைத்துள்ளனர். எனவே, நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜப்தி போன்ற நடவடிக்கைக்கு உள்ளாகாமல் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், பொதுமக்கள் வரிகளைச் செலுத்தி ஒத்துழைக்க வேண்டும்.

தற்போது பெய்துவரும் மழையால் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதுபோன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. மேலும், சாலையைச் சீரமைக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் சில இடங்களில் துவக்கப்பட்டுள்ளன.

மேலும், தற்போது சாலைகளில் தூசி அதிக அளவில் உள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாநகராட்சி சார்பில் தூசியை அகற்றும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

மின்வாரியம் சார்பில் ரூ.49 கோடி: மின்வாரியம் சார்பில், மாநகராட்சிக்கு ரூ.49 கோடி வரி செலுத்தப்பட வேண்டும். தெரு விளக்குகளுக்கு ஆகும் மின் கட்டணத்தை அந்த வரியிலிருந்து மாநகராட்சி கழித்துக் கொண்டு வருகிறது. மற்றபடி அலுவலகம், பள்ளி போன்றவற்றுக்கான மின் கட்டணத்தை மாநகராட்சி செலுத்தி வருகிறது. வரிப் பாக்கியை வசூலிப்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.

பேட்டியின்போது மாநகராட்சி துணை கமிஷனர் க. தர்ப்பகராஜ், தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், நகர்நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் ரா.பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.