தினகரன் 03.02.2011
கல்வி நிறுவனங்களுக்கு பேரூராட்சி சொத்து வரி விதிக்க இடைக்கால தடை
சென்னை, பிப்.3:
கல்வி நிறுவனங்களுக்கு பேரூராட்சிகள் சொத்து வரி விதிக்க, ஐகோர்ட் தடை விதித்தது.
பேரூராட்சி பகுதிகளில் செயல்படும் பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் சொத்து வரி நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து பொறியியல் கல்லூரிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று விசாரித்தார். மனுதாரர் சார்பாக ஆஜரான வக்கீல் கே.செல்வராஜ், ‘‘நகராட்சி சட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்துகள் விதித்த சொத்து வரிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, கல்வி நிறுவனங்களுக்கு பேரூராட்சிகள் சொத்து வரி விதிக்க தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.
இதை ஏற்ற நீதிபதி, கல்வி நிறுவனங்களுக்கு பேரூராட்சிகள் சொத்து வரி விதிக்க இடைக்கால தடை விதித்தார்.