தினகரன் 03.02.2011
வரி கட்டாதவர்கள் பெயர் தண்டோரா மூலம் அறிவிப்பு
பரமக்குடி, பிப். 3:பரமக்குடி நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிபாக்கிகள் செலுத்தாதவர்கள் பெயர் தண்டோரா மூலம் அறிவிக்கவும், பெயர் பலகைகளில் நோட்டீஸ் ஓட்டவும் கமிஷனர் நடவடிக்கை எடுத்தார்.
பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், குடியிருப்பு வீடுகளுக்கான 2010&11வது ஆண்டின் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகள் நகராட்சி நிர்வாகம் மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சொத்துவரி பாக்கி ரூ.157 லட்சத்தில் 103 லட்சமும், குடிநீர் கட்டண பாக்கி ரூ.111 லட்சத்தில் 66 லட்சமும், தொழில்வரி பாக்கி ரூ.24 லட்சத்தில் 3 லட்சமும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
வரி கட்டாதவர்கள் பட்டியலில் சபை நிர்வாகங்களும், கோயில் டிரஸ்டிகளும் உள்ளனர். பரமக்குடி அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.3 லட்சமும், பஸ் ஸ்டாண்டில் உள்ள ஓய்வறைக்கு ரூ.61 ஆயிரமும் வரிபாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. வரி கட்டாதவர்களின் பெயர்கள் 36 வார்டுகளிலும் தண்டோரா மூலம் அறிவிக்கவும், பெயர் பலகையில் நோட்டிஸ் ஓட்டவும் கமிஷனர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கமிஷனர் அட்சயா கூறுகையில், ‘சொத்துவரி, குடிநீர் கட்டணம் கட்டாத நபர்களின் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வரிபாக்கியுள்ள கடைகளின் உரிமையாளர்கள் பலர் பணம் கட்டி வருகின்றனர். சில மாதங்களில் வரிபாக்கிகள் அனைத்தும் வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றார்.