தினமலர் 29.06.2011
மாநகராட்சி விரிவாக்க பகுதிக்கு வரிவிலக்கு
மதுரை:மதுரை மாநகராட்சி விரிவாக்கத்தில் இடம்பெறும் பகுதிகளுக்கு வரிவிலக்கு அளிக்க, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாநகராட்சியின் 72 வார்டுகளை , 100 வார்டுகளாக விரிவாக்கும் பணி நடந்து வருகிறது. நகராட்சிகளில் ஆனையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம், பேரூராட்சிகளில் ஆர்.வி.பட்டி, திருநகர், விளாங்குடி, ஊராட்சியில் மேலமடை, உத்தங்குடி, வண்டியூர், கண்ணனேந்தல், நாகனாகுளம், திருப்பாலை, சின்ன அனுப்பானடி, சிந்தாமணி, ஐராவதநல்லூர், புதுக்குளம், தியாகராஜர் காலனி பகுதிகள், மதுரை மாநகராட்சியோடு இணைகின்றன. இதற்கான பணி நடந்து வரும் நிலையில், மாநகராட்சி வரி குறித்து, இணைப்பு பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதை தடுக்கும் விதமாக வரிச்சலுகை வழங்க மாநகராட்சி முன்வந்துள்ளது. கமிஷனர் செபாஸ்டின் கூறியதாவது: புதிதாய் இணையும் பகுதிகளில் வசதிகள் குறைவாக இருப்பதால், மாநகராட்சிக்குரிய வரி விதிப்பதில் நியாயமில்லை. வசதிகள் செய்து தரும் வரை, தற்போதைய வரி தொடரும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பணியாளர்கள், மாநகராட்சி பணியில் ஈடுபடுத்தப்படுவர், என்றார். புதிதாய் இணையும் பகுதிகளுக்கு, கட்டமைப்பு வசதிகள் செய்து தர 1500 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தயார் செய்து, மாநகராட்சி சார்பில் அரசுக்கு அனுப்பியுள்ளனர்.