தினமணி 01.07.2011
நிலுவை வரிகளைச் செலுத்த மாநகராட்சி வேண்டுகோள்
திருநெல்வேலி, ஜூன் 30: திருநெல்வேலி மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களை மாநகராட்சிக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ந. சுப்பையன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சியின் நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நடமாடும் வரிவசூல் வாகனம் வார்டு வாரியாக அனுப்பப்பட்டு வரிவசூல் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை அருகில் உள்ள வார்டு அலுவலகங்கள் மற்றும் அலகு அலுவலகங்களில் செலுத்தலாம் எனினும் நடமாடும் வாகனம் தெருக்களுக்கே வந்து வரி வசூல் செய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்களுடைய நடப்பு வரி மற்றும் நிலுவை வரிகளை மாநகராட்சியில் செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் அவர்.