தினமலர் 30.07.2012
பத்து ஆண்டாக குடிநீர் வரி பாக்கி அரசு பணிமனைக்கு எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வரி பாக்கி செலுத்தாத அரசு போக்குவரத்துக் கழக கிளை பணிமனை நிர்வாகத்திற்கு நகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை (விழுப்புரம் கோட்டம்) நிர்வாகம் கடந்த 2002ம் ஆண்டிலிருந்து குடிநீர் வரி செலுத்தாமல் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் அருணாசலம் உத்தரவின் பேரில் நகராட்சி வரி வசூலிப்பாளர் சித்ரா தலைமையிலான அலுவலர்கள் ராஜி, முருகன், கில்டாரோசினி, திருச்செல்வி ஆகியோர் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு சென்றனர். குடிநீர் இணைப்பு வரி பாக்கி 12 ஆயிரத்து 600 ரூபாயை உடனடியாக கட்ட வேண்டும் என்றும், தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் நேபாள தெருவில் குடிநீர் இணைப்புக்கு வரி பாக்கி செலுத்தாத 5 வீடுகளின் இணைப்புகள் மற்றும் கணக்கில் வராத 5 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் ரூபாய் குடிநீர் வரி பாக்கி வசூல் செய்யப்பட்டது.