தினமணி 31.07.2012
வரிகளை உரிய காலத்தில் செலுத்தினால் பரிசு
செய்யாறு, ஜூலை 30: நகராட்சி வரிகளை உரிய காலத்தில் செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு பரிசு அல்லது சிறிதளவு தள்ளுபடி தரவேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற திருவத்திபுரம் நகர்மன்றக் கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது.
நகர்மன்ற துணைத் தலைவர் கே.எஸ்.செல்வராஜ், இவ்வாறு யோசனை தெரிவித்தார்.மேலும் நகரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வார்டுகளில் கொசு மருந்து தெளிக்க வேண்டும், குடிநீரை முறையாகச் சுத்திகரித்து வழங்க வேண்டும், நகர்மன்றக் ட்டத்தில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும், வார்டுகளில் தெருப் பெயர்களை தாங்கிய பலகைகள் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் முன்வைத்தனர்.
இக் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதியுடன், புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்கிட உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.