தினமலர் 23.08.2012
வணிக நிறுவனங்கள் நிலுவை வரி வசூலிக்க மேட்டூர் நகராட்சி தீவிரம்
மேட்டூர்: மேட்டூர் நகராட்சி வணிக நிறுவனங்கள் சொத்துவரி குறைப்படாதததால், 18 லட்சம் ரூபாய் வரை வரி நிலுவையில் உள்ளது. நிலுவை சொத்து வரி வசூலிக்க நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேட்டூர் நகராட்சியில் கடை, ஹோட்டல் உள்பட, 800க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும். இரு ஆண்டுக்கு முன் நகராட்சி நிர்வாகம் வர்த்தக நிறுவனங்களுக்கான வரி வசூலை, 150 சதவீதம் உயர்த்தியது.திடீரென சொத்துவரியை, 150 சதவீதம் உயர்த்தியதற்கு வர்த்தகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதை எதிர்த்து வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
எனினும், சொத்துவரியை உள்ளாட்சி நிர்வாகமே முடிவு செய்யலாம் என, நீதிமன்றம் கூறி விட்டது.அதை தொடர்ந்து உயர்த்தப்பட்ட சொத்துவரி சதவீதத்தை குறைக்ககோரி வர்த்தகர்கள் நகராட்சியில் கோரிக்கை விடுத்தனர். சொத்துவரி சதவீதம் குறைக்க வேண்டும் என, எழுந்த கோரிக்கையால், வர்த்தகர்கள் பலர் சொத்துவரி செலுத்தவில்லை. இதனால், மேட்டூர் நகராட்சிக்கு, 18 லட்சம் ரூபாய் வரை வர்த்தக நிறுவனங்கள் வரி சொத்துவரி வசூலாகாமல் நிலுவையில் உள்ளது.வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்று, 150 சதவீதம் உயர்த்தப்பட்ட வரியை, 110 சதவீதமாக குறைக்க நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அனுமதியை நகராட்சி நிர்வாக ஆணையம் வழங்கியவுடன் நிலுவை சொத்துவரியை முழுமையாக வசூலிக்க மேட்டூர் நகராட்சி முடிவு செய்துள்ளது.