தினமணி 30.08.2012
அரசு நிறுவன விளம்பர பதாகைகளுக்கு சொத்து வரி: தெற்கு தில்லி மாநகராட்சி முடிவு
புது தில்லி, ஆக. 29: தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரசு நிறுவனங்களின் விளம்பர பதாகைகளுக்கும் சொத்து வரி வசூலிக்கப்படும் என்று தெற்கு தில்லி மாநகராட்சியின் வரி வசூல் அதிகாரி பி.என். சிங் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது: தெற்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு மாநகராட்சி இதுவரை வரி விதிக்கவில்லை.
தற்போது அவற்றுக்கு சொத்து வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தில்லி மெட்ரோ, பி.எஸ்.இ.எஸ்., தில்லி டிரான்ஸ்கோ, தில்லி வக்ஃப் போர்டு, தில்லி சுற்றுலாத் துறை, தில்லி போக்குவரத்து நிறுவனம் ஆகியவை தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் எத்தனை விளம்பர பதாகைகள் வைத்துள்ளன என்று பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது விதிக்கப்படும் சொத்து வரி, இடத்தை மையமாக வைத்து நிர்ணயிக்கப்படும்.
பெட்ரோல் பங்குகள், சி.என்.ஜி. நிலையங்கள் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கும் என்று அவர் கூறினார்.