தினமணி 13.09.2009
மதுரை மாநகராட்சிப் பகுதியில் புதிய வரி விதிப்பு சிறப்பு முகாம்
மதுரை, செப். 12: மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 60 முதல் 65 வார்டுகள் பகுதிகளுக்கான புதிய வரிவிதிப்புக்கான சிறப்பு முகாமை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி சனிக்கிழமை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆணையர் எஸ்.செபாஸ்டின்,துணை மேயர் பி.எம்.மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் கூடுதல் கட்டடங்களுக்கு உடனடியாக வரி விதிப்பு செய்யவும், கிரயப் பத்திரங்களின் அடிப்படையில் பெயர் மாற்றம் பரிசீலனை செய்யவும், சுய வரிவிதிப்பு மற்றும் வீட்டு வரி தொடர்பான குறைகள் உடனடியாக பரீசிலனை செய்யப்பட்டது.
இதில் ஆணையர் எஸ்.செபாஸ்டின் கூறுகையில், மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களுக்கு வரிவிதிப்பு செய்யப்படாமல் இருப்பதாகப் புகார்கள் வரப்பெற்றன.
இதைத் தொடர்ந்து தற்போது இந்த சிறப்பு வரி விதிப்பு முகாம் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 70-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வரி விதிப்பு மற்றும் பெயர் மாற்றம் செய்ய மனு அளித்தனர்.
அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக வரிவிதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் 10 நபர்கள் பொட்டல் வரிக்கான தொகையை கணினி வரிவசூல் மையத்தில் செலுத்தினர். பிற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வாரந்தோறும் சனிக்கிழமை ஒவ்வொரு வார்டாக இந்த சிறப்பு முகாம் நடத்தப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
மண்டலத் தலைவர் அ.மாணிக்கம், வேலைக் குழுத் தலைவர் கண்ணன், உதவி ஆணையர் தேவதாஸ், மாமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.