தினமலர் 21.03.2013
குடியிருப்புக்கான வரி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை!
குன்னூர் : குன்னூர் நகராட்சிக்கு வரி பாக்கிசெலுத்த
வழங்கப்பட்ட சலுகை காலம் முடிவடைந்துள்ளதால், வரி செலுத்தாதவர்கள் மீது
சட்ட நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில், ஆயிரத்துக்கும்
மேற்பட்ட கடைகள், வீடுகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்கள்
உள்ளன.
நகராட்சிக்கு உரிய வரியினங்களை செலுத்துவதில் நகரவாசிகள், மார்க்கெட் கடை வியாபாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
"இந்தாண்டுக்குரிய வரியினங்களை கடந்த 15ம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும்' என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.
"உரிய வரியினங்களை உரிய காலத்துக்குள் செலுத்தி விட வேண்டும்; தவறினால், ஜப்தி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என வாகனம் மூலம் பிரசாரமும் செய்யப்பட்டது.
வசூலில் அதிரடி
நகராட்சி கமிஷனர் உத்தரவில், நகராட்சி வருவாய் அலுவலர் பாஸ்கரன் தலைமையில் வருவாய் துறையினர், வரி வசூலில் ஈடுபட்டனர்.
"நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் கடைகளில் இருந்து வாடகை, கடை உரிமப் புதுப்பிப்பு கட்டணம்' என இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது; சுமார் 4 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது.
சொத்து வரியாக, இதுவரை 2 கோடியே 35 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது; 17 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது.
தண்ணீர் கட்டணமாக இதுவரை 90 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை தண்ணீர் வரி செலுத்தாத 30 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாளும் 4 வார்டுகளில் வரி செலுத்தாத குடிநீர் இணைப்பு துண்டிப்பு பணியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கெடு முடிந்தது
குன்னூரில் அடிப்படை தேவைகள் அதிகமாக உள்ள நிலையில்,
வசூலிக்கப்படும் வரி இனங்கள் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள உதவும், என்ற
சூழலில் வரியினங்களை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த நகராட்சி வருவாய்
துறையினர் அறிவுறுத்தியுள்ளர்.
நகராட்சி வருவாய் அலுவலர் பாஸ்கரன் கூறுகையில், ""நகராட்சிக்கு
செலுத்த வேண்டிய வீட்டு வரி, தண்ணீர், தொழில் வரி உட்பட வரியினங்களை
நாளைக்குள் சம்மந்தப்பட்டவர்கள் செலுத்தி விட வேண்டும்.
வரி செலுத்த தவறுவோரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும்; ஜப்தி
செய்ய சொத்து இல்லாதவர்கள் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்படும்; தவிர, வரி
செலுத்தாக வீடு, நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நீர் இணைப்பு
துண்டிக்கப்படும்; வாடகை செலுத்தாத கடைகள் சீல் வைக்கப்படும்,'' என்றார்.