தினமணி 14.11.2009
புதிய பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி: ஒரே நாளில் ரூ.3 லட்சம் வசூல்திருநெல்வேலி, நவ. 13: திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் வாடகை பாக்கியாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.3 லட்சம் வசூலானது.
திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் வேய்ந்தான்குளத்தில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இப் பஸ் நிலையத்தில் மாத வாடகை அடிப்படையில் கடைகள் செயல்படுகின்றன.
இதில் பல கடைகள் வாடகை பணத்தை முறையாக செலுத்தாமல் இழுத்தடித்தாகக் கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சிக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் அந்தக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி, மாநகராட்சி ஊழியர்கள் புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளைப் பூட்டுவதற்கு வெள்ளிக்கிழமை காலை அங்கு சென்றனர்.
இதையறிந்த அந்தக் கடை உரிமையாளர்கள், உடனடியாக வாடகை பாக்கியைச் செலுத்தினர். இவ்வாறு மொத்தம் ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வெள்ளிக்கிழமை மட்டும் வசூலானது. அனைத்து கடைகளும் வாடகை பாக்கியைச் செலுத்தியதால், மாநகராட்சி ஊழியர்கள் கடையைப் பூட்டும் நிலைமை ஏற்படவில்லை.