தினமணி 19.11.2009
அனைத்து வார்டுகளிலும் புதிய வரிவிதிப்புக்கான சிறப்பு முகாம்
மதுரை, நவ. 18: அனைத்து வார்டுகளிலும் புதிய வரி விதிப்புக்கான சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குள்பட்ட 60-வது வார்டு புதிய விரிவிதிப்புக்கான சிறப்பு முகாமை, சம்மட்டிபுரம் வரிவசூல் மையத்தில் ஆணையர் எஸ். செபாஸ்டின் முன்னிலையில், மேயர் கோ. தேன்மொழி புதன்கிழமை துவக்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையர் தெரிவித்தாவது:
அனைத்து மண்டலங்களிலும் புதிய வரிவிதிப்புக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. புதிய கட்டடங்களுக்கான வரிவிதிப்பு, சொத்துவரி பெயர் மாற்றம், பொட்டல் வரி விதிப்பு என அனைத்துவிதமான வரிவிதிப்புகளையும் ஒரே நாளில் செய்வதற்காக, இந்த முகாம் நடத்தப்படுகிறது.
இம்முகாமில், 38 நபர்களுக்கு சொத்துவரி பெயர் மாற்றம், 12 நபர்களுக்கு புதிய கட்டடத்துக்கான சொத்துவரி, 6 நபர்களுக்கு பொட்டல் வரி விதிப்பும் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ. 1.61 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இச்சிறப்பு முகாம் மூலம் காலதாமதம் ஏற்படாமல் உடனடியாக வரிவிதிப்பு செய்யப்படுவதால், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எனவே, இச்சிறப்பு முகாம் இனி தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் நடத்தப்படும் என்றார் ஆணையர்.
நிகழ்ச்சியில், மேற்கு மண்டலத் தலைவர் என். நாகராஜன், கவுன்சிலர் ராஜபாண்டி, உதவி ஆணையர் (மேற்கு) ஆர்.ஜே. ரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.