தினமணி 24.12.2009
சொத்து வரி செலுத்தாத கட்டடங்களின் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும்: மாநகராட்சி ஆணையர்
மதுரை, டிச. 23: மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் உள்ள கட்டடங்களின் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும் என ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆணையர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையர் தெரிவித்ததாவது:
மாநகராட்சிக்கு சொத்து வரியை செலுத்தாமல் உள்ள கட்டடங்களுக்கான குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும்.
மேலும், வரி வசூல் செய்யாமல் மெத்தனமாக இருக்கும் சம்பந்தப்பட்ட உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர்கள், வரித் தண்டலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, மாநகராட்சி இடங்களில் வாடகை அடிப்படையில் உள்ள கடை உரிமைதாரர்கள் மற்றும் ஏலதாரர்கள், மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய உரிமத் தொகையை உடனடியாக செலுத்தவேண்டும். அவ்வாறு செலுத்தாவிடில் கடைக்கான உரிமத்தை ரத்து செய்வதோடு கடையைப் பூட்டி பொறுப்பெடுத்து,இனிவரும் காலங்களில் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாத அளவில் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும். மேலும், மாநகராட்சிக்கு ஏற்படும் இழப்பீட்டுத் தொகையும் சேர்த்து அவர்களிடம் வசூலிக்கப்படும் என்றார் ஆணையர்.
கூட்டத்தில், துணை ஆணையர் சு.சிவராசு, உதவி ஆணையர்கள் இரா.பாஸ்கரன், அ.தேவதாஸ், ரவீந்திரன், ராஜகாந்தி, அங்கயற்கண்ணி, உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் மற்றும் வரித் தண்டலர்கள் கலந்துகொண்டனர்.