தினமலர் 30.12.2009
தனி நபர்களிடம் வரி வசூலிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி திட்டம்
சென்னை : சென்னை மாநகராட்சி, தனி நபர்களிடம் தொழில் வரி வசூலிக்கும் பணியை, ஒப்பந்த அடிப்டையில், தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது.மாநகராட்சி வருவாய்த் துறை மூலம், தொழில் வரி மற்றும் கம்பெனி வரி வசூல் நடந்து வருகிறது. இதற்காக, மாநகராட்சியில், 50 உரிம ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்தாண்டு தொழில் வரியாக 85 கோடி ரூபாயும், கம்பெனி வரியாக 47 லட்சம் ரூபாயும் வசூலானது.
நகரில் தொழில் புரிவோர் மற்றும் பணி புரிவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், மாநகரட்சியின் 50 உரிம ஆய்வாளர்கள் மூலம் 155 வார்டுகளிலும் நேரடி களஆய்வு மேற் கொள்ள முடியாத நிலை எற்பட்டுள்ளது.இதனால், சென்னை நகரில் தொழில் புரியும் தனி நபர்களிடம் தொழில் வரி வசூல் செய்யும் பணியை, ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தனிநபர் வருவாய் ஈட்டும் விவரங்களை கண்டறிதல், தொழில் வரி செலுத்தாத தனி நபர் களுக்கு மாநகராட்சி மூலம் சட்டப்படியான அறிவிப்புகளை பெற்றுத் தருதல், நிலுவை தொகை வசூலித்தல் போன்ற பணிகள், தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.இதில், வசூலாகும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை, சம்பந்தபட்ட தனியார் நிறுவனத்திற்கு கமிஷனாக வழங்கவும் மாநகராட்சி திட்டமிட் டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு, வரும் 31ம் தேதி நடைபெறும் மன்றக் கூட்டத்தில் அனுமதி பெறப்பட உள்ளது.