தினமலர் 25.01.2010
ஓட்டல் கழிவுகளை எடுக்கும் கட்டணத்தை உயர்த்த முடிவு
திருப்பூர் : ஓட்டல், திருமண மண்டபங்கள், பேக்கரி; டீக்கடைகள், பழமுதிர் நிலையங்கள், இரவு நேர தள்ளுவண்டி உணவகங்களில் சேகரமாகும் கழிவை, குப்பை லாரிகள் மூலம் அகற்ற விதிக்கப் பட்டுள்ள கட்டணத்தை உயர்த்த, திருப்பூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் உட்பட லட்சக்கணக்கான தமிழர்கள் கோவை வர உள்ளனர். அங்கு வரும் தமிழர்கள், பனியன் நகரமான திருப்பூருக்கும் வர வாய்ப்பு உள்ளதால், இந்நகரை, தூய்மையாக்கும் பணியில் மாநகராட்சி கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், பேக்கரி; "டீ' ஸ்டால்கள், பழமுதிர் நிலையங்களில் தினமும் சேகரமாகும் கழிவுகளை வீதிகளில் கொட்டுவதற்கு தடை விதிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இக்கடைகளில் தினமும் சேகரமாகும் கழிவுகள், குப்பை லாரிகள் மூலம் அகற்றப்படுகின்றன; அதற்காக, கட்டணம் வசூலிக்கிறது மாநகராட்சி. அக்கட்டணத்தை, மாநகராட்சி நிர்வாகம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தீர்மானம், வரும் 28ம் தேதி நடக்கு கவுன்சில் கூட்டத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
புதிய கட்டண விபரம்: (பழைய கட்டணம் அடைப் புக்குறிக்குள்). ஒரு வாரத்துக்கு "ஏ' வகுப்பு உணவு விடுதிகளுக்கு 300 ரூபாய் (ரூ.150); "பி' வகுப்பு உணவு விடுதிகளுக்கு 200 ரூபாய் (ரூ.100); "சி' வகுப்பு உணவு விடுதிகளுக்கு 150 ரூபாய் (ரூ.75); பழமுதிர் நிலையங்களுக்கு 200 ரூபாய் (ரூ.100); சிறிய பழமுதிர் நிலையங்களுக்கு 100 ரூபாய் (ரூ.50).
பேக்கரி, "டீ' ஸ்டால்களுக்கு ஒரு மாதத்துக்கு 300 ரூபாய் (ரூ.150); இரவு நேர தள்ளுவண்டி உணவு கடைகளுக்கு ஒரு வாரத்துக்கு 120 ரூபாய் (ரூ.60); "ஏ' வகுப்பு திருமண மண்டபங்களில் ஒரு நிகழ்ச்சிக்கு 800 ரூபாய்; "பி' வகுப்பு மண்டபங்களில் நிகழ்ச்சிக்கு 400 ரூபாய் (ரூ.200) என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மாமன்ற கூட்டத்தில், கவுன்சிலர்கள் ஒப்புதலுக்கு பின், இக்கட்டண விகிதங்கள் நடைமுறைப்படுத்தப்படும