தினமணி 04.02.2010
வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
உடுமலை,பிப்.3: 2009-10 ம் ஆண்டு செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என உடுமலை நகராட்சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உடுமலை நகராட்சி ஆணையாளர் அ.சுந்தராம்பாள் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர்க் கட்டணம், காலியிட வரி, தொழில் வரி, நகராட்சி கடை வாடகைகள், லைசென்ஸ் கட்டணங்கள் உள்ளிட்ட வரியினங்களை பிப்ரவரி மாத இறுதிக்குள் நகராட்சி கணினி மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வரி இனங்களை செலுத்தாமல் இருந்தால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். கடைகள் பூட்டி சீல் வைத்து நகராட்சி பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும், சொத்துவரி செலுத்தாத வீடுகளை பூட்டி சீல் வைத்தல், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் வரி செலுத்தாத காலியிடங்களை நகராட்சி வசம் கை யகப்படுத்துதல் போன்ற சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகவே வரி இனங்களை உடனடியாக செலுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.