Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காரைக்குடி நகராட்சிக்கு ரூ.6.80 கோடி வரி பாக்கி: பிப்.15 முதல் 28 வரை தீவிர வசூல் முகாம்

Print PDF

தினமணி 10.02.2010

காரைக்குடி நகராட்சிக்கு ரூ.6.80 கோடி வரி பாக்கி: பிப்.15 முதல் 28 வரை தீவிர வசூல் முகாம்

காரைக்குடி, பிப். 9: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் ரூ. 6.80 கோடிக்கு நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்காக, வரும் 15 முதல் 28-ம் தேதி வரை தீவிர வசூல் முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து, நகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சொத்து வரி நிலுவை ரூ. 4.93 கோடி, தண்ணீர் கட்டணம் ரூ. 52.70 லட்சம் தொழில் வரி நிலுவை ரூ. 95 லட்சம், குத்தகை இனங்கள் ரூ. 39 லட்சம் என மொத்தம் 6.80 கோடி வரி பாக்கிகள் வசூலிக்கப்பட வேண்டியுள்ளது.

இவற்றை துரிதமாக வசூல் செய்யும் பொருட்டு, காரைக்குடி நகராட்சி வரும் 15 முதல் 28-ம் தேதி வரையிலான நாள்களை தீவிர வசூல் முகாம் நாள்களாக அறிவித்துள்ளது.

இந்த நாள்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நகராட்சி அலுவலகக் கணினி மையம் இயங்கும். மேலும், வரி நிலுவைகளை வசூலிக்க மேலாளர், நகரமைப்பு அலுவலர் ஆகியோர் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, பொது மக்கள் தீவிர வசூல் முகாம் தேதிகளில் வரிகளை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

Last Updated on Wednesday, 10 February 2010 11:16