தினமணி 12.02.2010
கோவை மாநகராட்சியில் கூடுதலாக 2 வரி வசூல் மையங்கள் துவக்கம்கோவை, பிப்.11: கோவை மாநகராட்சியில் கூடுதலாக 2 வரி வசூல் மையங்கள் வியாழக்கிழமை துவக்கப்பட்டது. கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 11}வது வார்டு வரதராஜபுரம் திருமண மண்டபம், 6}வது வார்டு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் புதிய மையங்கள் மேயர் ஆர்.வெங்கடாசலம் துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா தலைமை வகித்தார். துணை மேயர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தார். இப் புதிய மையங்களுடன் சேர்த்தால், மாநகராட்சியில் மொத்தம் 16 வரி வசூல் மையங்கள் உள்ளன. வடக்கு மண்டலத்தில் மேலும் இரு மையங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் சொத்துவரி ரூ.64 கோடி வசூலிக்கப்பட வேண்டும். இதுதவிர குடிநீர் கட்டணம், தொழில்வரி, உரிமக் கட்டணம் உள்ளிட்டவையும் இம் மையங்களில் வசூலிக்கப்படும். பொதுமக்களுக்கு கூடுதல் வசதியை அளிக்கும் வகையில் பிரதான அலுவலகம், மண்டல அலுவலகங்கள், சாயிபாபா காலனி, சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் வரி வசூல் மையங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கி வருகின்றன.
சொத்துவரியை அக்.15}ம் தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், பொதுமக்கள் பலர் மார்ச் 31}ம் தேதி வரை காத்திருந்து செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் தங்களது சொத்துவரி மற்றும் பிற வரிகளை உடனடியாகச் செலுத்த வேண்டும் என ஆணையர் அன்சுல் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். கிழக்கு மண்டலத் தலைவர் எஸ்.எம்.சாமி, ஆளும் கட்சித் தலைவர் ஆர்.எஸ்.திருமுகம், 11}வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.