தினமணி 16.02.2010
சொத்து வரி வசூல் : போடி நகராட்சி சாதனை
போடி, பிப். 15: தமிழகத்தில் முதல்முறையாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே 100 சதவீத சொத்து வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது போடி நகராட்சி.
இந்த நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் 85 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குத்தகை இனங்கள் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் சொத்து வரி உள்ளிட்ட வரி இனங்களை வசூல் செய்ய துரித நடவடிக்கை எடுத்தது. கணினி மூலம் வசூல் செய்யும் பணி நடைபெற்றது. வசூல் செய்யும் நேரம் அதிகரிக்கப்பட்டது.
மேலும் சனிக்கிழமைகளிலும் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு வரி வசூல் செய்யப்பட்டது. வரி செலுத்துவதில் ஏதேனும் பிரச்னை இருப்பின் சொத்து உரிமையாளர்கள் நேரடியாக வரவழைக்கப்பட்டு, அவர்களுடைய பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. விளம்பரம் மற்றும் வீடு வீடாக நகராட்சி அலுவலர்கள் சென்று அறிவுறுத்தியதன் மூலம் பொதுமக்கள் தங்கள் சொத்து வரிகளை செலுத்தினர்.
இந்த நகராட்சியில் சொத்து வரி 16 ஆயிரத்து 266 வீடு மற்றும் காலி இடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மார்ச் மாத இறுதியில்தான் சொத்து வரி வசூல் முடியும். சில நேரங்களில் ஏப்ரல் மாதம் வரையும் நடைபெறும்.
ஆனால் நகராட்சியின் சிறப்பு ஏற்பாடுகளால் பிப்ரவரி மாதத்திலேயே 100 சதவீதம் வசூல் முடிந்துள்ளது. இதில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 70 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே 100 சதவீத சொத்து வரி வசூல் செய்து சாதணை புரிந்துள்ள நகராட்சியாக போடி விளங்குகிறது.
இந்த நகராட்சியில் 10 ஆயிரத்து 320 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.74 லட்சத்து 77 ஆயிரத்து 878 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நகராட்சியில் தொழில் வரி, குத்தகை இனங்கள் உள்ளிட்ட வருவாய் இனங்கள் மூலம் ரூ.3 கோடியே 15 லட்சத்து 84 ஆயிரத்து 319 வருமானம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது ரூ.2 கோடியே 21 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் கூறும்போது, பொதுமக்கள் ஆர்வமுடன் வரிகளை செலுத்துகின்றனர். இதனால் இந்த சாதனையைப் படைத்துள்ளோம், இதன் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்றார்.