தினமணி 16.02.2010
சொத்துவரியை செலுத்தாவிட்டால் ஜப்தி
திருவண்ணாமலை, பிப். 15: நகராட்சிகளில் சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்கள் மார்ச் மாதத்துக்குள் செலுத்தாவிட்டால் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகராட்சிகளின் சொத்துவரி நிலுவை குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியது:
நகராட்சிகளில் சொத்துவரி வசூல் திருப்திகரமாக இல்லை. 40 முதல் 50 சதவீதம் வரைதான் வசூலாகி உள்ளது. பிப்ரவரி மாதத்துக்குள் 80 சதவீதமும், மார்ச் மாதத்துக்குள் 90 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும். சொத்துவரி நிலுவை வைத்துள்ளோரின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நகராட்சி ஆணையர்கள் சேகர் (திருவண்ணாமலை), சசிகலா (வந்தவாசி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.