தினமணி 17.02.2010
நல்லூர் நகராட்சியில் வரிவசூல் தீவிரம்: 25க்குள் குடிநீர் கட்டணம் செலுத்த கெடு
திருப்பூர், பிப்.16: நல்லூர் நகராட்சியில் வரிவசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து பிப்.25ம் தேதிக்குள் குடிநீர் கட்டணம் செலுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பை துண்டிக்கவும் நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
திருப்பூரை அடுத்த நல்லூர் நகராட்சியில் 2009-10ம் நிதியாண்டுக்கான வரிவசூல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நடப்பு நிதியாண்டில் கணக்கிடப்பட்ட ரூ.1.80 கோடி சொத்துவரியில் இதுவரை ரூ.1.17 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.51 லட்சம் குடிநீர் கட்டணத்தில் இதுவரை ரூ.27 லட்சமும், ரூ.11 லட்சம் தொழில் வரியில் இதுவரை ரூ.5 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 56 சதவீதம் வசூலா கியுள்ளது.
இந்நிலையில், முழுமையாக வரி வசூல் செய்ய இன்னும் ஒருமாதமே உள்ளதால் இந் நகராட்சியில் வரிவசூலிக்கும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் குடிநீர் கட்டணத்தை பிப்.25ம் தேதிக்குள் செலுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தவறும்பட்சத்தில் முன்னறிவிப்பின்றி குடிநீர் இணைப்பை துண்டிக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே, நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் விரைவில் தங்கள் வரித்தொகைகளை செலுத்தி மேல் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்று நகராட்சி தலைவர் ஜி.விஜயலட்சுமி, செயல்அலுவலர் சண்முகம் தெரிவித்துள்ளனர்.