தினமணி 17.02.2010
வரி ஏய்ப்பு: குடிநீர் இணைப்பு துண்டிப்பு
திருப்பூர், பிப்.16: 3 ஆண்டுகளுக்கு மேலாக வரி ஏய்ப்பு செய்து வந்த வீடுகளின் குடிநீர் இணைப்பை 15வேலம்பாளையம் நகராட்சி நிóர்வாகம் துண்டிப்பு செய்தது. தொடர்ந்து இதேபோல் வரிஏய்ப்பு செய்து வரும் வீடுகளை கணக்கெடுத்து குடிநீர் இணைப்புகளை துண்டிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூரை அடுத்த 15வேலம்பாளையம் நகராட்சி பகுதியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை 3 ஆண்டுகளுக்கு மேலாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள குடியிருப்புகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நகராட்சிக்கு உட்பட்ட 1, 5 மற்றும் 6வது வார்டுகளில் 11 வீடுகளில் 3 ஆண்டுகளுக்கு மேலாக வரி பாக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவ் வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்க நகராட்சி செயல்அலுவலர் குற்றாலிங்கம் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவ் வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நகராட்சி பொறியாளர் மல்லிகை தலைமையில் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்குள் தங்கள் வரிபாக்கி முழுவதையும் உடனடியாக செலுத்தி விடுவதாக 9 வீட்டு உரிமையாளர்கள் அளித்த உறுதியை ஏற்று அவ்வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது. இருப்பினும், எவ்வித பதிலும் தெரிவிக்காத சாஸ்திரி வீதியைச் சேர்ந்த 2 வீடுகளின் குடிநீர் இணைப்புகளும் அதிகாரிகளின் முன்னிலையில் துண்டிக்கப்பட்டன.
தொடர்ந்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மார்ச் மாதத்துக்கு பிறகு வரிஏய்ப்பு செய்வோர் வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று நகராட்சி பொறியாளர் மல்லிகை தெரிவித்தார்.