தினமணி 26.02.2010
திருச்சி மாநகராட்சி தீவிர வரி வசூல் முகாம்: பிப். 28-ம் தேதியுடன் முடிவடைகிறது
திருச்சி, பிப். 25: சொத்து வரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களை வசூலிக்கும் திருச்சி மாநகராட்சியின் தீவிர வரி வசூல் முகாம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைய உள்ளதாக ஆணையர் த.தி. பால்சாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களை வசூல் செய்யும் தீவிர வரி வசூல் முகாம் கடந்த 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் வருகிற 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கென, பொன்மலை, கோ-அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் ஆகிய 4 கோட்ட அலுவலகங்களில் உள்ள சேவை மையங்களிலோ அல்லது தஞ்சாவூர் சாலை- அரியமங்கலம் வார்டு அலுவலகம், சுப்பிரமணியபுரம் வார்டு அலுவலகம், மேலக் கல்கண்டார்கோட்டை வார்டு அலுவலகம், விறகுப் பேட்டை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகம், கே.கே. நகர் வார்டு அலுவலகம், கள்ளத்தெரு வார்டு அலுவலகம், நந்தி கோவில் தெரு வார்டு அலுவலகம், உறையூர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், எடமலைப்பட்டிபுதூர் சித்த மருத்துவகத் கட்டடம், தேவர் ஹால் ஆகிய இடங்களில் சனி, ஞாயிறு உள்ளிட்ட அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் தாங்கள் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை வரிவசூல் முகாமின் இறுதி நாளான பிப். 28-ம் தேதிக்குள் செலுத்தி ஜப்தி நடவடிக்கை மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.