தினமணி 03.03.2010
சொத்து வரி வசூலிக்க 300 நவீன கருவிகள்
சென்னை மாநகராட்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சொத்து வரி வசூலிப்பதற்கான திட்ட அறிமுக நிகழ்ச்சியில் வரி வசூலிப்பவர்களுக்கு கையடக்க கருவியை வழங்ககப்பட்டது
சென்னை,மார்ச் 2: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பதற்காக ரூ. 94 லட்சம் செலவில் 300 நவீன கையடக்க கருவிகள் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த கருவியின் மூலம் சொத்து வரி வசூலிப்பதால் எந்தெந்த அரையாண்டு காலத்துக்கான வரி வசூல் செய்யப்படுகிறது என்ற விவரம் உடனடியாக கணினியில் பதிவு செய்யப்படுவதோடு, வரி செலுத்துவோருக்கும் உடனடியாக ரசீது வழங்கப்படும்.
கருவிகளை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியது:
நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.350 கோடி வரியில், இதுவரை ரூ.301 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. பல வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகளாகக் கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டது கண்டறியப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியைக் காட்டிலும், அதிகமாக வசூலிக்கும் ஊழியர்களுக்கு சுதந்திர தினத்தன்று பரிசுகள் வழங்கப்படும் என்றார் மேயர் மா.சுப்பிரமணியன்.