தினமணி 03.03.2010
சென்னை மாநகராட்சி அனுப்பிய தொழில் வரி நோட்டீஸ்: திருவொற்றியூர் வியாபாரிகள் அதிர்ச்சி
திருவொற்றியூர்,மார்ச் 2: சென்னை மாநகராட்சி அனுப்பிய தொழில் வரி நோட்டீஸôல் திருவொற்றியூர் வியாபாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திருவொற்றியூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தொழில் நடத்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகளுக்கு தொழில் வரி செலுத்தக் கோரி சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தந்த நகராட்சியில்தான் தொழில் வரி செலுத்தப்படுவது வழக்கம். அதன்படி திருவொற்றியூர் பகுதியில் தொழில் நிறுவனங்களை நடத்துவோர் திருவொற்றியூர் நகராட்சியில்தான் வரி செலுத்த வேண்டும். இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வந்திருப்பது கண்டு வியாபாரிகள் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். திருவொற்றியூர் நகராட்சி சென்னை மாநகராட்சியுடன்
இணைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2011-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் வரி வசூல் வந்துவிட்டது என்று சிலர் தெரிவித்தனர். இதனால் தொழில் வரியை திருவொற்றியூர் நகராட்சியில் செலுத்துவதா அல்லது சென்னை மாநகராட்சியில் செலுத்துவதா என வியாபாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தவறுதலாக நோட்டீஸ்:இப்பிரச்னை குறித்து திருவொற்றியூர் நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் கூறுகையில் ""வணிக வரித் துறையில் தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்களின் முகவரிகள் பெறப்பட்டு அதன்படி சென்னை மாநகராட்சியின் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் திருவொற்றியூர் முகவரிகளும் சேர்ந்துவிட்டன.
இது தவறுதலாக நடைபெற்ற ஒன்று. நோட்டீஸ் குறித்து யாரும் குழப்பம் அடைய வேண்டாம். தொழில் வரியை திருவொற்றியூர் நகராட்சியில் மட்டும் செலுத்தினால் போதுமானது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் தவறை ஒப்புக் கொண்டுள்ளனர்'' என்றார் கலைச்செல்வன்.