தினமலர் 04.032010
நகராட்சி வரிவசூல் பணியை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தல்
தஞ்சாவூர்: தஞ்சையில் அனைத்து வரி வசூல் மையங்களும் காலை 9 முதல் மாலை 5 வரை விடுமுறை இல்லாமல் செயல்படும். அதிகாரிகளும் விடுமுறை தினம் பார்க்காமல் வரிவசூல் பணியை துரிதபடுத்த வேண்டும் என்று ஆணையர் அறிவுறுத்தினார். தஞ்சை நகர பகுதியில் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், அலுவலர்கள் கலந் தாய்வு கூட்டம் நடந்தது. அப்போது ஆணையர் நடராஜன் பேசியதாவது: தஞ்சை நகராட்சிக்கு சொத்துவரி நிலுவை ரூ.4 கோடியே 50 லட்சம், குடிநீர் வரி நிலுவை ரூ.3 கோடியே 4 லட்சம், தொழில் வரி ரூ.1 கோடியே 6 லட்சம், வரியில்லாத இனத்தின் கீழ் ரூ.1 கோடியே 76 லட்சம் உள்ளது. இதுவரை 50 சதவீதத்திற்கு குறைவான தொகையே வசூல் செய்யப்பட்டுள்ளது. வரும் 31ம்தேதி முடிவதற்குள் 100 சதம் வசூல் செய்ய வேண்டும். நகராட்சியின் நிதிநிலை திருப்திகரமாக இல்லை. இதனால் மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. பொதுமக்கள் நலன் கருதி அனைத்து வரி வசூல் மையங்களும் காலை 9 முதல் மாலை 5 வரை விடுமுறை இல்லாமல் செயல் படும். வரி வசூல் செய்யும் அதிகாரிகளும் விடுமுறை தினங்கள் என்று பார்க்காமல் வரி வசூல் பணியில் தீவிரம் காட்ட வேண்டும்.
இவ்வாறு ஆணையர் கூறினார். பொறியாளர் காமராஜ், நகரமைப்பு அலுவலர் கோவிந்தசாமி, நகர் நல அலுவலர் அர்ஜூன்குமார், மேலாளர் ராமச்சந்திரன், வருவாய் அலுவலர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.