தினமலர் 16.03.2010
ஓட்டல் கழிவுகளை அகற்ற கட்டணம் வசூலிக்க முடிவு
திருப்பூர்: ஓட்டல், பேக்கரி, திருமண மண்டபங்களில் சேகரமாகும் கழிவுகளை அகற்ற, நல்லூர் நகராட்சியில் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் ஓட்டல், பேக்கரி, பழமுதிர் நிலையங்களின் கழிவுகளை, பொது சுகாதார திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2000ன் படி அகற்ற கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், திருமண மண்டபங்களில் சேகரமாகும் குப்பையை எடுக்கவும் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கோவை மாவட்டம், குறிச்சி நகராட்சியில், ஓட் டல்களுக்கு மாதம் 300 ரூபாய்; பேக்கரி மற்றும் பழமுதிர் நிலையம் சிறியவைக்கு 25, நடுத்தரம் 50, பெரியது 100; திருமண மண்டபங்களில் ஒரு நிகழ் வுக்கு 500 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நல்லூர் நக ராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகராட்சி செயல் அலுவலர் சண்முகம் கூறுகையில், ""ஓட்டல், பேக்கரி, திருமண மண்டபங்களில் சேகரமாகும் கழிவுகளை எடுக்க, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; ஏப்., முதல் இக்கட்டணம் வசூலிக்கப்படும்,'' என்றார்.