தினமலர் 19.03.2010
கொண்டலாம்பட்டி மண்டலத்தில் புதிய வரி வசூல் மையம் துவக்கம்
சேலம்: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் புதிய வரி வசூல் மையம் துவங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் வரி வசூல் பணியை எளிமையாக்குவதற்காக செவ்வாய்ப்பேட்டை அப்புசாமி தெரு, அரிசிப்பாளையம் ராஜேந்திரா சத்திரம் பகுதி, கிச்சிப்பாளையம் மாநகராட்சி மருத்துவமனை ஆகிய இடங்களில் புதிதாக மூன்று வரி வசூல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த ஆண்டு பொதுமக்களிடம் நேரடியாக சென்று வரி வசூல் பணியை மேற்கொள்ள புதிதாக வரி வசூல் வாகனம் வாங்கப்பட்டது. நேற்று கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட ஜாரி கொண்டலாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே புதிய வரி வசூல் மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் செயல்பட்டு வந்தது. புதிய வரி வசூல் மையத்தை சேலம் மேயர் ரேகாபிரியதர்ஷினி துவக்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி, உதவி கமிஷனர் நெப்போலியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.