தினமலர் 19.03.2010
வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டியில் குடிநீர் குழாய்வரி, வீட்டுவரி செலுத்தாதவர்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.தேவதானப்பட்டி பேரூராட்சியில் அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி, பெருமாள்கோவில்பட்டி, பெருமாள்புரம், மஞ்சளார், காமக்காபட்டி கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. மாதம் தோறும் செலுத்த வேண்டிய தண்ணீர் வரியை பலர் செலுத்தாததால் வரி பாக்கி அதிக அளவில் நிலுவையில் இருந்தது.
இவை தவிர குழாய் இணைப்புகளில் அனுமதி இல்லாமல் பலர் மின் மோட்டார் மூலம் நீரை திருடி வந்தனர். இதனால் மேடான பகுதிகளுக்கு நீர் சப்ளை செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. மார்ச் 15 க்குள் தண்ணீர் வரி, வீட்டுவரி, சொத்துவரி செலுத்த வேண்டும் என்று பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மின் மோட்டார்களையும் அகற்றிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக செயல் அலுவலர் பாபுஜி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டித்து வருகின்றனர். குடிநீர் குழாய்களில் அனுமதி இல்லாமல் பொருத்தப்பட்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.