தினமலர் 26.03.2010
டிராக்டரில் ஒலி பெருக்கி அமைத்து பேரூராட்சியில் அதிரடி வரி வசூல்
பள்ளிப்பட்டு : பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரியை, டிராக்டரில் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து கொண்டே அதிரடியாக வசூலிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு குடிநீர் வசதிக்காக தெருக்களில் குடிநீர் குழாய்கள் அமைத்துள்ளனர். மேலும் 1,400 வீடுகளுக்கு தனியாக அட்வான்ஸ் தொகை பெற்றுக் கொண்டு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெற்றவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், கடந்த 10 ஆண்டுகளாக கட்டணம் செலுத்தவில்லை. இந்த வகையில், பேரூராட்சிக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டிய தொகை, இம்மாதம் 10 தேதி வரை 35 லட்சம் ரூபாயை தாண்டியது.அதிக வரி பாக்கி உள்ள பேரூராட்சிகளில் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி முதலிடம் வகித்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பழனிக்குமார் உத்தரவுப்படி பொதட்டூர் பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், டிராக்டரில் ஒலி பெருக்கி அமைத்து தெருத் தெருவாக சென்று அதிரடியாக வரி வசூலில் ஈடுபட்டார். குடிநீர் வரி பாக்கி உள்ளவர்கள் இணைப்பை துண்டித்து வருகிறார். கடந்த மூன்று நாட்களில் 200க்கும் மேற்பட்ட இணைப்புகளை துண்டிப்பு செய்ததன் விளைவாக ஒன்பது லட்சம் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டது. சிலர் அட்வான்ஸ் பணம் செலுத்தாமல் குடிநீர் இணைப்பை அமைத்திருந்தனர். அவர்களின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.