Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.7.95 லட்சம் வாடகை பாக்கி; தாராபுரம் ஓட்டலுக்கு 'பூட்டு'

Print PDF

தினமலர் 31.03.2010

ரூ.7.95 லட்சம் வாடகை பாக்கி; தாராபுரம் ஓட்டலுக்கு 'பூட்டு'

தாராபுரம் : தாராபுரம் நகராட்சி வணிக வளாக கடையில் ஓட்டல் நடத்தியவர், ஏழு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளார். இதையடுத்து, ஓட்டலை வருவாய் ஆய்வாளர் கள் பூட்டி 'சீல்' வைத்தனர்.

தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சி வணிக வளாக கடையை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக மோகன் என்பவர் குத்தகைக்கு எடுத்து ஓட்டல் நடத்தி வந்தார். அரசு பஸ்கள், உணவுக்காக 10 நிமிடம் நின்று சென்றதால், ஆரம்பத்தில் இந்த ஓட்டலில் வியாபாரம் நன்றாக நடந்தது. தாராபுரம் - திண்டுக்கல் ரோட்டில் தனியார் சார்பில் இரு 'மோட்டல்'கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், வாடிக்கையாளர்களை அதிகரிக்க மோட்டல் நடத்துவோர், அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு உணவு, சிகரெட், பார்சல் சாப்பாடுகளை இலவசமாக வழங்கினர். மோட்டல்காரர்களின் இதுபோன்ற 'ஸ்பெஷல் கவனிப்பால்' தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்தி, உணவு அருந்துவதை டிரைவர், கண்டக்டர்கள் தவிர்த்தனர். இதனால், பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலுள்ள கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. கடைகளை குத்தகைக்கு எடுத்திருப்போர், நகராட்சிக்கு மாத வாடகை செலுத்தவே தவித்து வந்தனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் ஓட்டல் நடத்திய மோகன், நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வாடகை ஏழு லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் பல மாதங்களாக கூறியும் பலனில்லை; வாடகை கட்ட அவகாசம் கேட்டு, சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு கொடுத்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ஆறு வாரத்துக்குள் 50 சதவீதம் வாடகை பாக்கியை கட்ட வேண்டுமென உத்தரவிட்டார். நீதிமன்றம் அளித்த காலக்கெடு கடந்த 26ம் தேதியுடன் முடிந்தது; வாடகை கட்டாததால் ஆர்.., இந்திராணி, வரி வசூலர் கணபதி, ஜெகதீஸ், கிராம நிர்வாக ஆய்வாளர் வெங்கடேஷன், சுகாதார ஆய்வாளர் பிச்சை, நாட்ராயன் ஆகியோர், ஓட்டல் கதவை பூட்டி 'சீல்' வைத்தனர்.

Last Updated on Wednesday, 31 March 2010 05:58