தினமலர் 05.12.2010
குடிநீர் இணைப்பை வலியுறுத்திதுண்டு பிரசுரம் வினியோகம்
கடலூர்:கடலூர் நகரில் குடிநீர் இணைப்பு பெற வலியுறுத்தி கமிஷனர் தலைமையில் ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.கடலூர் நகரில் 40 சதவீத வீடுகளில் மட்டுமே நகராட்சி குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். 60 சதவீத வீடுகளில் குடிநீர் இணைப்பு பெறவில்லை.
இதற்கிடையே பாதாள சாக்கடை திட்டப் பணி முடிவடைந்த வீதிகளில் சாலைபோடும் பணி விரைவில் துவங்கப்படவுள்ளது.அவ்வாறு சிமென்ட் சாலை போடப்பட்ட பகுதிகளில் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு சாலையை உடைத்து இணைப்பு கொடுக்க முடியாது. எனவே சாலைப்பணி துவங்குவதற்கு முன்பே குடிநீர் இணைப்பு இல்லாதவர்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என நகராட்சி வலியுறுத்தி வருகிறது.இது பற்றிய விழிப்புணர்வை கடலூர் மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி கமிஷனர் குமார் தலைமையில் பொறியாளர் ரூபன்சுரேஷ் பொன்னையா உள்ளிட்ட ஊழியர்கள் மஞ்சக்குப்பம் 10வது வார்டில் வீடுவீடாக துண்டு பிரசுரம் வழங்கினர்.