தினகரன் 09.11.2010
குடிநீர் இணைப்புக்கு கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவு எம்.எல்.ஏ. தலைமையில் பேச்சுவார்த்தை
பொள்ளாச்சி, நவ 9: பொள்ளாச்சியை அடுத்த கம்பாலபட்டி ஊராட்சியில் குடிநீர் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வால்பாறை எம்.எல்.ஏ. கோவை தங்கம் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்குட்பட்டது கம்பாலபட்டி ஊராட்சி. அரசூர், குள்ளேகவுண்டனூர், அமணலிங்காபுரம், குருசாமியூர், கோடங்கிபட்டி, பாரமடையூர், பூவலப்பருத்தி ஆகிய குக்கிராமங்கள் கம்பாலபட்டி ஊராட்சிக்குட்பட்டவையாகும். இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதிகளில் அரசு திட்டத்தின் கீழ் இலவச கலர் டி.வி., இலவச காஸ் இணைப்பு ஆகியவை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், குடிநீர் இணைப்புக்கு பல ஆயிரம் ரூபாயை கூடுதலாக வசூலிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் வால்பாறை எம்.எல்.ஏ. கோவை தங்கம், நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென் றனர்.
இந்நிலையில் எம்.எல்.ஏ. கோவை தங்கம் தலைமையில் கம்பாலபட்டி ஊராட்சியில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் ஒன்றிய அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். அப்பகுதி தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்த ரங்கராஜன், கண்ணன், செந்தில்வேல் உள்ளிட்டோர் எம்.எல்.ஏ. கோவை தங்கத்திடம் கூறுகையில்,
இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்னும் 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச கலர் டி.வி. க்களும், 900க்கும் மேற்பட்டோருக்கு இலவச காஸ் இணைப்புகளும் வழங்கப்பட வேண் டும். இவற்றை வழங்க தாமதப்படுத்தி வருகின்றனர். மேலும் ஊராட்சிகளில் குடிநீர் இணைப்புக்கு ரூ. ஆயிரம் மட்டும் கட்டணமாக பெற வேண் டும் என்ற விதிமுறை இந்த ஊரா ட்சியில் மட்டும் மீறப்பட்டுள்ளது.
குடிநீர் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் ரூ. 4 ஆயிரத்து 100 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 80க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலித்துவிட்டு குடிநீர் இணைப்பு வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.
ஊராட்சியில் உதவியாளர் ஓய்வு பெற்றதும் அவரது மகனையே உதவியாளராக பணியில் அமர்த்தினர்.
அதேசமயம் கூடுதலாக தினக்கூலி அடிப்டையில் ஒரு பெண் உதவியாளரையும் நியமித்துள்ளனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட 7 குக்கிராமங்கள் உள்ள நிலையில் கோட்டூரில் இருந்து ஒருவரை இந்த பணியில் அமர்த்த வேண்டிய அவசியம் என்ன?.
ஊராட்சியின் செயல்பாடு குறித்து எந்த ஒரு தகவலும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது கிடையாது. இவ்வாறு ஊராட்சி நிர்வாகம் மீது பல்வேறு புகார்களை கூறினர்.
இவற்றை விசாரித்த எம்.எல்.ஏ. கோவை தங்கம் பேசுகையில், இலவச கலர் டி.வி., காஸ் இணைப்பு அனைத்தும் மிக விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
குடிநீர் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டிக்கிறேன். ரூ. ஆயிரம் கட்டணத்திற்கு அதிகமாக வசூலித்த தொகையை உடனடியாக விண்ணப்பித்தவர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும். எந்த ஒரு குறையாக இருந்தாலும் உடனே என்னை தொடர்பு கொண்டு முறையிடுங்கள். பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அதிகாரிகளுக்கு அறிவுரை
அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சரியாக சென்று சேர்த்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளிடம்தான் உள்ளது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சியின் செயல்பாட்டை சரிவர கண்காணித்திருந்தால் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்பட்டிருக்காது. ஆகவே இனிவரும் காலங்களிலாவது அதிகாரிகள் தங்கள் பணியினை சரியாக செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ. கோவை தங்கம் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.