Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரி செலுத்தாத கட்டடங்கள் கணக்கெடுப்பு

Print PDF

தினமணி 26.10.2010

வரி செலுத்தாத கட்டடங்கள் கணக்கெடுப்பு

திருநெல்வேலி, அக். 25: திருநெல்வேலி மாநகர் பகுதியில் வரி செலுத்தாத கட்டடங்களை கண்டறிய தனியார் மூலம் கணக்கெடுப்பு நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி வருவாயை பெருக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவை தீவிரமாக வசூலிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாநகரில் பல குடியிருப்புகள், வணிக வளாகங்கள் வரி விதிப்புக்கு உட்படாமல் இருப்பது மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியவந்துள்ளது.

இதனால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை மாநகராட்சி கண்டறிந்துள்ளது. இதையடுத்து, இவ்வாறு வரி விதிப்புக்கு உட்படாமல் இருக்கும் கட்டடங்கள், குடியிருப்புகளை கண்டறிந்து, அவற்றிடம் வரி வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இப் பணியை குறுகிய காலத்துக்குள் கண்டறியும் கணக்கெடுப்பு பணிக்கு போதிய ஊழியர்கள் மாநகராட்சியில் இல்லையென கருதப்படுகிறது. இதனால் இக் கட்டடங்களை கண்டறியும் கணக்கெடுப்பு பணிக்கு தனியார் நிறுவனங்கள் அல்லது அரசு கல்லூரிகளை பயன்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்கு செவ்வாய்க்கிழமை (அக்.26) காலை 11 மணிக்கு நடைபெறும் மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இக் கூட்டத்துக்கு மேயர் அ.லெ.சுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார்.

துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் என். சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மேலும் மாநகரை சுகாதாரமாக வைப்பதற்கு மாநகராட்சி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மாநகராட்சி பகுதிகளில் தினமும் துப்புரவு பணி மூலம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள், சங்கர்நகரில் இருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கழிவு பிளாஸ்டிக் பொருள்களை சில தனியார்கள், விலைக்கு வாங்குவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதன்படி கிலோவுக்கு ரூ. 2.65 தொடங்கி ரூ. 2.10 வரை விலைக்கு வாங்குவதாக சிலர் ஒப்பந்தம் கோரியுள்ளனர். ஒப்பந்த புள்ளிகளின் படி அதிகபட்சமாக கிலோ பிளாஸ்டிக் ரூ. 2.65 கேட்டுள்ளவருக்கு, கழிவு பிளாஸ்டிக் பொருள்களை வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் மாநகராட்சிக்கு புதிதாக வருவாயும் கிடைக்கும். இதற்கான தீர்மானம் மாமன்ற அவசரக் கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது. இதேபோல பல முக்கியத் தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளன.

 

ஆரணி நகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரி பாக்கி கட்டாவிட்டால் ஜப்தி ஆணையாளர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்       26.10.2010

ஆரணி நகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரி பாக்கி கட்டாவிட்டால் ஜப்தி ஆணையாளர் எச்சரிக்கை

ஆரணி, அக்.26: ஆரணி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, குடிநீர் வரி மற்றும் வாடகை பாக்கிகளை உடனடியாக செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து ஆரணி நகராட்சி ஆணையாளர் சசிகலா நேற்று அளித்த பேட்டி:

ஆரணி நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தவேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, நகராட்சி கடை வியாபாரிகள் வாடகை நிலுவை, குத்தகை இனங்கள் உள்ளிட்ட வரி பாக்கிகளை உடனடியாக செலுத்தி நகர வளர்ச்சித் திட்டப்பணி களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

வரி, வாடகை பாக்கி செலுத்தாதவர்களின் சொத்துகள் ஜப்தி செய்யப்படும். கடைகளுக்கு சீல் வைக்கப்படும். குடிநீர் இணைப்பை துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலையை சுற்றி நகராட்சி அலுவலர்கள், ஊழியர்களின் சொந்த செலவில் நவீன பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இதற்கு விருப்பம் உள்ளவர்கள் உதவி செய்யலாம். மேலும் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ளே வெங்கட்ராமன் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

நகராட்சியை சேர்ந்த சுந்தரம் தெரு, வடியராஜா தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக புகார்கள் வந்துள்ளன. அதை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

கிராமப்புறங்களில் சொத்து வரி வசூல் திட்டத்தை கைவிட்டது மாநகராட்சி

Print PDF

தினகரன் 26.10.2010

கிராமப்புறங்களில் சொத்து வரி வசூல் திட்டத்தை கைவிட்டது மாநகராட்சி

புதுடெல்லி, அக். 26: நிதி நெருக்கடியை சமாளிக்க கிராமப்புறங்களிலும், நகர்ப்புறமாகும் கிராமங்களிலும் சொத்து வரியை விதிக்க மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால் அதற்கு கிராமப்புறங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமின்றி, மாநகராட்சியை ஆளும் பா...வைச் சேர்ந்த கவுன்சிலர்களும் கடும் எதிரப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பான திட்டம் பற்றி விவாதிப்பதற்காக நிலைக்குழு கூட்டம் நடந்தது. "கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் ஆடு, மாடு போன்ற விலங்களை நம்பி வாழ்கிறார்கள். விலங்குகளை கட்டவும், அவைகளுக்கான தீனிகளை வைக்கவும் பெரிய அளவில் இடம் தேவைப்படுகிறது. அதனால் அவர்களுக்கு சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு விலக்கு அளிக்கப்படவில்லையென்றால் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் கிராமப்புற வாசிகளுக்கு இழைத்த அநீதியாகி விடும்" என்று கவுன்சிலர்கள் கூறினர்.

பாஜவைச் சேர்ந்த துணை நிலைக்குழு தலைவர் சரிதா சவுத்ரி, எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்கிஷன் சர்மா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்தை நிறைவேற்றக் கூடாது, அதை திருப்பி அனுப்ப வேண்டும் என்று நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியாவை வலியுறுத்தினர். இதனால் கிராமப்புறம் மற்றும் வளர்ந்து வரும் கிராமப்புறங்களில் சொத்து வரியை விதிக்க வகை செய்யும் திட்டம் கைவிடப்பட்டது.

 


Page 50 of 148