தினகரன் 22.10.2010
சொத்துவரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
நெல்லை, அக். 22: நெல்லை மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாத வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.
நெல்லை மாநகராட்சி யில் நெல்லை, பாளை, தச் சை, மேலப்பாளையம் என 4 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து மாநகராட்சிக்கு செலுத்த வேண் டிய சொத்துவரி மற்றும் குடிநீர் வரி மண்டல அலுவலகங்கள், சேவை மையம் மற்றும் வரிசூல் வாகனம் மூலமாக வரி வசூலிக்கப்படுகிறது.
மேலும் வரிகளை உடனடியாக செலுத்த பொதுமக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது அறிவிப்பு செய்துவருகிறது. ஆனால் இதையும் மீறி கடந்த 3 ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் பாளை மண்டலத்தில் திருச்செந்தூர் சாலை பகுதி, பஸ்ராவுத்தர் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சொத்துவரி செலுத்தாத 5 வீடுகளில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் ஊழியர்கள் கருணாகரன், அனந்தகிருஷ்ணன், வடிவேல் முருகன் ஆகியோர் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.
இதுபோல் 3 ஆண்டுகளுக்கு மேலாக சொத்துவரி செலுத்தாதவர்கள் வீடுகளிலும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை தொடரும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
பாளை பகுதியில் சொத்து வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.