தினமலர் 19.10.2010
வரி செலுத்தாதவர் விபர பட்டியல்பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சிக்கு வரி செலுத்தாதவர்கள் பெயர் பட்டியல் முகவரியுடன் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:நெல்லை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, தண்ணீர் கட்டணம், தொழில் வரி, பாதாளசாக்கடை சேவைக்கட்டணம் மற்றும் கடை வாடகைகளை பொதுமக்கள் செலுத்த நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட தச்சநல்லூர், பாளை, நெல்லை, மேலப்பாளையம் மண்டலத்திலுள்ள சேவை மையம் மற்றும் அலகு அலுவலகங்களில் வசூலிக்கப்பட்டது.
நெல்லை மாநகராட்சியில் தற்போது தீவிர வரி வசூல் முகாம் நடந்து வருகிறது. இதுதவிர நடமாடும் வரிவசூல் வாகனம் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சென்று மக்களிடம் வரிகளை பெற்று வருகின்றது. இன்னும் ஒரு சிலர் தாங்கள் செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தாமல் மாநகராட்சிக்கு நிலுவை வைத்துள்ளனர். இதனால் மாநகராட்சி நிர்வாகம் மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.எனவே மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள நபர்களின் பெயர் மற்றும் முகவரி அடங்கிய பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட்கள் மற்றும் இதர பொது இடங்களிலும் வைக்கப்படவுள்ளது. இதுதவிர இந்த பட்டியல் வெப்சைட்டிலும் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.எனவே வரி மற்றும் குத்தகை இனங்களை செலுத்தாதவர்கள் மாநகராட்சி வரி வசூல் மையங்களில் வரி பாக்கியை செலுத்தி பட்டியலில் இடம் பெறுவதை தவிர்க்கலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.