தினமலர் 08.09.210
வரி வசூல் பணியில் அலட்சியம்; மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
சேலம்: "" சேலம் மாநகராட்சி வரி வசூல் பணியில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி தலைமையில், நேற்று வரி வசூல் பணி குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கமிஷனர் பழனிசாமி பேசியதாவது: சேலம் மாநகராட்சியில் நிதி ஆதாரத்தை பெருக்கவும், புதிய நலத்திட்டப்பணிகளை மேற்கொள்வதும் அவசியம். தவிர, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மின்சார துறைக்கும் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை கட்டணமாக செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, மாநகராட்சிக்கு சொந்தமான சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை ஆகியவற்றை அதிகாரிகள் முனைப்புடன் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்டிடங்களுக்கு முறையாக வரி விதிப்பு செய்ய வேண்டும். சொத்துவரி உள்ளிட்டவற்றை செலுத்த வருபவர்களுக்கு முறையாக விண்ணப்பம் வினியோகம் செய்து கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். வரி வசூல் பணியில் அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி பணியாளர்கள் மீது மாநகராட்சி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார். மாநகராட்சி உதவி கமிஷனர்கள், உதவி வருவாய் ஆய்வாளர்கள், பில் கலெக்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.